Sunday 23 December 2012

நவீன தமிழின் பிதாமகன்

நவீன தமிழின் பிதாமகன்

காலம் ஒரு சக்தி வாய்ந்த படைப்பாளி பிறந்ததும் ஒரு கோடு கிழிக்கிறது. அந்தப் படைப்பாளி காலமானதும் மீண்டும் மறுகோடு கிழிக்கிறது இந்த இரு கோடுகளுக்கும் இடைப்பட்ட சித்திரமே அவன் சாதனை.
பாரதி என்ற மனிதர் பிறந்தது டிசம்பர் 1882. பாரதி என்ற படைப்பாளி, உலகிற்கு வெளியானது ஜூலை 1904ல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் பாரதியின் படைப்பாற்றலுக்கான கொதி நிலை உருவாகிறது. பாரதிக்கு முன்னே காலம் கிழித்த கோட்டுக்கு அப்பால் தெரியும் முக்கியப் படைப்பாளிகளை அறிவது, பாரதி எங்கே தொடங்கித் தமிழ் இலக்கியத்தை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார் என்று தெளிவாக்கும்.
யமகம், திரிபு, சில்லறைப் பிரபந்தம் கொலைச் சிந்து ஆகிய பல்வேறு இலக்கிய (?) முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தன, ஓர் உயிர் வாழும் மொழி என்றும் ஓய்வதில்லை. பெரிய ஓட்டப்பந்தயங்களிலும், போராட்டத்திலும் ஈடுபட்டுக் களைத்து போய் அசமந்தப் (க்ணண்ஞுணூடிணிதண்) போக்கில் ஈடுபடும் ஒரு கால கட்டம் அதற்கு நேரும். எல்லா மாபெரும் மொழிகளுக்கும் அது நேர்ந்திருக்கிறது. அப்படி ஒரு கால கட்டம்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
தமிழிலக்கியத் தராசிற்கு நிற்கும் கனம் வாய்ந்த படைப்பாளிகள் அப்போதும் இருந்தனர். வடலூர் ராமலிங்க சுவாமிகள் கோபால கிருஷ்ண பாரதியார். சுந்தரம் பிள்ளை, பி.ஆர். ராஜமையர், அருணாசலக் கவிராயர், முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆகியோரே இதில் முக்கியமானவர்கள். தமிழில் முதலாவது இலக்கிய அமைதி வாய்ந்த சிறுகதை எழுதிய வ.வெ.சு. ஐயரும் இவர்களில் ஒருவர்.
மேற்குறித்த எழுவருமே பூரண இலக்கியப் படைப்பாளிகள் என்ற மதிப்பீட்டுக்கு உரியோர். இவர்களுள் ராஜமையர், வேதநாயகம் பிள்ளை, சுந்தரம் பிள்ளை ஆகிய மூவரும் ஐரோப்பிய இலக்கியம் படித்தவர்கள். அதன் வடிவங்களையும் உள்ளோட்டங்களையும் தமிழ் மண்ணில் விளைவிக்க முயன்றவர்கள். இந்த முயற்சிகளைப் பாரதி கிரகித்துக் கொண்டார்.
வடலூரார், கோபாலகிருஷ்ண பாரதியார். அருணாசலக் கவிராயர் ஆகியோர் தொன்று தொட்டு வரும் தமிழிலக்கிய மரபின் புதிய தொடர்ச்சிகள். ஆக இவர்களும் பாரதியின் உருவாக்கத்திற்குத் துணை புரிந்தனர். அவரது பாடல்களை ஊன்றிப் படிப்போர் இதை உணர்வர்.
பாரதியின் எழுத்து உத்வேகம் பீறிட்டெழுகின்ற கால கட்டத்தில் மூன்று தேசீய சர்வ தேசீய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. (1) சுதந்திரப்போராட்டம் (2) முதலாவது உலக மகாயுத்தம் (3) ரஷ்யப் புரட்சி. இந்த மூன்று நிகழ்ச்சிகளுக்கும் பாரதி என்ற படைப்பாளியை மும்முனைகளில் தாக்கின. அந்தத் தாக்குதலை ஏற்று, இந்திய மண்ணின் ஆணிவேர் போன்ற ஆன்மீகப் பார்வையிலிருந்து சற்றும் பிடிவிடாது பாரதி நடத்திய போராட்டே அந்தக் காலத்தின் தமிழ் இலக்கிய வரலாறும் வளர்ச்சியும் ஆகும்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாரதியின் நன்கொடை என்ன என்பதுதான் நமது கேள்வி. சில நம்பிக்கை நட்சத்திரங்களுக்குப் பின் ஒரு சூரியன் போன்று உதித்த பாரதியின் பேராற்றலை, நான்கு பிரிவுகளில் பார்ப்பதே அதற்குரிய மரியாதையைச் செய்வதாகும். மிகக் குறுகிய (1904 முதல் 1921 வரை) காலமான சுமார் 18 ஆண்டுகளில் கவிதை, வசனம், வசன கவிதை, ஜர்னலிஸம் ஆகிய நான்கு துறைகளில் பாரதி ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்திருக்கிறார். ஒவ்வொன்றாக அத்துறைகளைப் பார்க்கும்போது, பாரதி நடத்திய மஹாயக்ஞமும் அதன் விளைவும் நமக்குத் தெளிவாகும்.
பாரதியின் முக்கியமான வெளியீடு கவிதையே. அதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். “நமக்குத் தொழில் கவிதை” என்று நிலை நாட்டிச் சொன்னார், பாரதியின் கவிதைகளில் கருப்பொருள், உருவம் இரண்டிலும் அவர் காலம் தொடங்குவது வரை, தமிழ் கண்டிராத புதுமைகள் பல உண்டு.
இதில் கருப்பொருள் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். அன்று வரை, தமிழ்க் கவிதை பாரத நாடு முழுவதும் தழுவிய தேச பக்தியை பிரதிபலித்ததில்லை. நாம் அனைவரும் பாரதத்தின் மக்கள் அதன் மீது பக்தி கொண்ட புதல்வர் என்ற வெளியீட்டையே தமிழிலக்கியம் முதன் முறையாகப் பாரதி மூலம் தான் அனுபவித்தது.
அதே போன்று சேர, சோழ, பாண்டியன் என்ற குறுநில மனப்பான்மையை விடுத்து நாம் அனைவரும் தமிழர், நம் நாடு தமிழ் நாடு என்ற பிரக்ஞையை தமிழிலக்கியத்தில் ஆணித்தரமாக வலியுறுத்திய முதல் படைப்பாளியும் பாரதியே.
தமிழ் மொழியின் மீது பண்டிதர்களும் தமிழ் அறிஞரும் கொண்டிருந்த மூர்க்கமான உடமைப் பற்றினைப் பாரதி ஒரு காதலன் போன்று விடுவித்து இணையிலாத நேசத்துடன், அதை எளியோருடன் பேசும் மொழியிபாரதி பல மொழிகளைப் பயின்றவர். அவற்றில் தோய்ந்து ஈடுபட்டவர். தமிழ் மொழியே எல்லாவற்றிலும் இனியது என்றும்
வள்ளுவர், இளங்கோ, கம்பன் போன்ற புலவர் எங்கணும் பிறந்ததில்லை என்றும் முரசறைந்து சொன்னவர்.
இது தமிழிலக்கியத்தில் கேட்ட தீரமான முதலாவது குரல். நமது தன்னம்பிக்கை, தமிழ்ப் பற்று ஏன் தமிழ் வெறி கூடப் பிறந்தது அந்த குரல் கொடுத்த தெம்பிலேதான்.
தமிழின் மீது ஆழ்ந்த காதல் ஒரு புறம். அதன் தாழ்ந்த நிலைமை குறித்து அடங்காத சோகம் ஒருபுறம் இவற்றைப் பிரதிபலிக்கும். விழிப்புணர்ச்சிப் பாடல்கள் பாரதிக்கு முன்னே இல்லை. இந்த விழிப்புணர்ச்சியைத் தொடங்கி வைக்கும் வீரவிளக்கு பாரதிதாசன்.
என்னதான், தமிழையும் தமிழ் நாட்டையும் ஆறாத காதலோடு நேசித்த போதிலும், ஒருபோதும் பாரதி அது பாரத நாட்டின் அங்கம் என்பதை மறந்தவரில்லை. அவருக்கு முன்னே பிற மாநில மக்களை வென்ற பெருமிதம்; அவர்கள் இழிந்தவர்கள் என்று இகழ்ந்த சான்றுகள் தமிழிலக்கியத்தில் உண்டு. ஆனால் பாரதியே முதல் முதலாகப் பாரத தேசத்தின் பிற மாநில மக்களை தன் அகன்ற கரம் விரித்து ஆரத்தழுவிய முதலாவது படைப்பாளி.
பாரதிக்கு கவிதை ஒரு கைவாள் மட்டுமில்லை. கவிதை ஒரு கோடரி. கவிதை ஒரு கலப்பை, புன்மை கண்டு போரிட்டுத் தமிழிலக்கியத்தில் படைப்பாளிகளின் கால்படாத காடுகளை வெட்டி அழித்துக் கை தொடாத கன்னி நிலங்களை உழுது பெரு விளைச்சல் காட்டியிருக்கிறது பாரதியின் கவிதை.
ஒரு லட்சிய அயோத்தியைக் கம்பன் கற்பனை செய்ததுண்டு. போகத்தில் புரளும் புகாரைப் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் சித்தரித்ததுண்டு. ஆனால் மனித முயற்சிகளைக் குறித்துத் தமிழிலக்கியம் அதற்கு முன்பு திட்டமிட்ட இலக்குகளோடு கனவு கண்டதில்லை.
கனவு காண்பதன் மூலமாக வெள்ளிப் பனிமலையில் உலவுவோம். மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவுக்கு பாலம் அமைப்போம். ஆயுதம், காகிதம், குடை, உழுபடை, கோணி, வண்டிகள், ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள், காவியம் ஓவியம் ஏன் ஊசிகள் கூடச் செய்வோம் என்று பிறந்த பிரகடனம், மூத்து முதிர்ந்த தமிழில் ஒரு புதிய குரல்.
மனிதனின் பௌதீக உலக முயற்சிகள் குறித்து வாழ்த்தி, அதை வரவேற்று, அதற்குக் கனவு கண்ட பாரதி, தமது காலத்தை, தம் படைப்பில் அப்பட்டமாகப் பிரதிபலித்தார்.
விடுதலைப் போராட்டம், அந்தக் காலத்தின் இதயத் துடிப்பு சுதந்திரத்தின் அருமை, தேசீயத் தலைவர் பெருமை இவற்றைக் குறித்துப் பாரதி பாடல்கள் 23 ஆகும். இவை தமிழிலக்கியத்தில் புத்தம் புதிய கருப்பொருள்கள்.
அடுத்து பாரதி தமது கவிதையை, சர்வ தேசியத் தன்மை வாய்ந்ததாக்கினார். தமிழிலக்கியத்தின் பழைய கரைகளையும் எல்லைகளையும் இடித்து விசாலப்படுத்தினார். மாஜினியின் பிரதிக்கினை, பெல்ஜியத்திற்கு வாழ்த்து, புதிய ருஷ்யா இவை தமிழிலக்கியத்திற்கு புதிய பார்வைகள். தமிழிலக்கியம் பாரதியால் வென்றவர்களுக்குப் பரணி பாடிப் பழகியது தமிழிலக்கியம். பாரதி புது மரபு செய்தார். தோற்ற பெல்ஜியத்தை வாழ்த்தினார்.
பாரதி பாடிய தோத்திரப் பாடல்கள் 98. இவற்றுள் சக்தி, கண்ணன் ஆகிய தெய்வங்களைப் பற்றிய பாடல்களே பெரும்பான்மை. துதிக் கவிதை தமிழுக்கு மிகவும் பழகிய ரதம். அதில் ஏறிய பாரதி, புதிய பாதைகளில் செய்த சாரத்தியம் நமக்குத் தெய்வத்தை மிகவும் நெருக்கமான உறவாக்கிற்று.
தாயிலும், தந்தையிலும், குருவிலும், குழந்தையிலும், நாயகனிலும் மட்டும் தெய்வத்தைத் தரிசித்தது தமிழ் மரபு. மன்னன், மந்திரி, காதலி, சேவகன், சீடன் என்று பல உறவுகளில் தெய்வத்தைக் கண்டு, அதை நம் உயிரில் கலந்தவர் பாரதி. ஒரு தெய்வ நாயகியான வள்ளியைத் தானே தெய்வ முருகனாகியப் பேருணர்வு கொண்டு புணர்ந்து கூடிக் களித்து அந்த சிருங்கார ரஸத்தில் சற்றேனும் விகார பாவம் தோன்றாதவாறு சித்தரித்த பெருமை தமிழில் ஒரு புதிய மைல்கல்.
மதப்போர்களுக்குக் களமாயிருந்த தமிழிலக்கியத்தை, தான் இம்மியளவும் நெறி பிறழாத ஹிந்துவாய் வாழ்ந்த போதிலும் கிறிஸ்தவம், இஸ்லாம், பார்ஸி என்று பெயர் சொல்லி வணங்கி மூச்சு முட்டி நின்ற தமிழிலக்கியத்தின் பரப்பை விரிவு செய்த முதலாவது தமிழ்க் கவிஞரும் பாரதிதான்.
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்னும் தைரியம் பாரதிக்கே இருந்தது.
பாரதி எழுதிய ஞானப் பாடல்கள் 34, அத்வைத சாகரத்தில் திளைத்து வேதாந்த சிகரங்களை இதில் தொட்டிருக்கிறார். “காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையு மெங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை” இந்தப் பார்வையில் எல்லையொன்றின்மை என்ற கருத்தின் உட்பொருளுக்கு வடிவம் தந்தார்.வண்டிக்காரன், ஒரு பாமர அம்மாக்கண்ணு, சிட்டுக் குருவி, குடுகுடுப்பாண்டி, பண்டாரம் இவர்கள் வாயிலே பாரதி ஞானங்களைப் பேச வைத்தார். கவிதைகளிலே ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதைச் செயல் வடிவாக்கினார் பாரதி. இலக்கண மரபு அந்த மூன்று லட்சணங்களுக்கும் தடை போட்டால் அதைத் தீரத்தோடு உடைத்து அவர் கவி செய்தார். சாதிக் கொடுமை, சமூகக் கொடுமை, சோற்றுப் பஞ்சம் இவை அவரால் முதல் முதலில் கவிதையாயின.
பாரதி சங்கீத ஞானமுள்ளவர் கவிதைக்கும் சங்கீதத்துக்கும் உள்ள சம்பந்தம் உணர்ந்தவர். தாம் எழுதிய பல கவிதைகளை ராகம், தாளம் என்று இசைக் குறிப்புத் தந்து பல்லவி, சரணங்கள் எனக் கீர்த்தனை பாணியில் எழுதித் தமது முன்னோடிகளான கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசலக் கவிராயர் முதலியோரின் பாதையை இன்னும் பெரிதாக்கினார்.
சுயசரிதை, தமிழ்க் கவிதைக்குப் புதியது. அதற்கும் பாரதியே முன்னோடியானார் அதே போன்று குழந்தைகளை முன் நிறுத்தி அவர்களுக்காக வென்றே தமிழில் எவரும் கவிதை செய்ததில்லை. ஔவையாரின் ஆத்திசூடி அறநெறிகளை குழந்தைகளை உத்தேசித்துப் புகட்டுவது போல் தோன்றினாலும், அது குழந்தைகளுக்காக மட்டும் ஆக்கப்பட்டதல்ல.
குழந்தை இலக்கியத்தின் பிதாமகன் பாரதியே வெள்ளை நிறப்பசு, கொத்தித் திரியும் காக்கை, வண்டி இழுக்கும் குதிரை, அண்டிப் பிழைக்கும் ஆடு என்று குழந்தை புரிந்து கொள்ளும் மொழியிலே அதனோடு பேசிய முதலாவது தமிழ்க் கவி பாரதியே.
பெண் விடுதலையே, தமிழுக்குப் புதிய கருத்து, பெண்ணடிமை பாரதிக்கு முன் போற்றப்பட்டு வந்தது. சங்க இலக்கியம் சமுதாயத்தில் பெண்ணுக்கு இருந்த பெருமை பேசியது. பெண்ணின் அவலம் குறித்து அங்கே குரல்கள் இல்லை. பெண் விடுதலைக்குக் கவிதைக் கைவாளை முதலிலே உயர்த்திய வீர மறவன் பாரதியே. 
அநீதிகளை சகித்து, சமுதாய மதிப்பிற்காக அதைச் சிலுவையாக ஏற்றுக் கொள் என்று தான் தமிழிலக்கியம் பெண்ணை நிர்ப்பந்தித்து வந்தது. எழுந்து நில், உன் உரிமைக்குப் போராடு என்று பெண்மைக்கு வீரம் வழங்கிய முதலாவது தமிழிலக்கிய படைப்பாளி பாரதியே மேலும் விஞ்ஞானம், நவீன அறிவியல், சங்கீதம் எனப் பல விஷயங்களைப் பாரதியின் கவிதை தொட்டது.
பாரதியின் இரு பெரும் (Masterpieces) படைப்புக்கள் பாஞ்சாலி சபதமும் குயில் பாட்டும், ஸ்தல புராணங்களைத் தவிர வேறு நெடிய கவிதை முயற்சிகள் செய்தறியாத தமிழில், காவிய மரபு அழியவில்லை; பாஞ்சாலி சபதம் இதில் பாரதியின் ஆளுமை முழுதும் வெளிப்பட்டிருக்கிறது. ஞானம், வீரம், பக்தி, காதல், நகைச்சுவை, சோகம், கொந்தளிப்பு என்ற பல சுவைகளில் தமிழிலக்கியத்தின் ஜீவநிதி சேமித்து வந்த சகல நீரோட்டங்களின் சாராம்சமும், கம்பீரமான காவியதரிசனமும் பாஞ்சாலி சபதத்தில் உண்டு. பாஞ்சாலியைப் பலர் பாரத மாதாவாகக் காணுமளவு சித்தரித்து நிகழ் காலத்தோடு ஒரு மானசீக இயைபு செய்தார்.
குயில்பாட்டு, தமிழில் அதற்கு முன்னும் அதற்குப் பின்னும் தமிழிலக்கியம் எட்டாத ஒரு புதிய சிகரம். முற்றிலும் மாறுபட்ட கவி முயற்சி. வேதாந்த அர்த்தம். ஒரு விநோதக் கதை, இசையின்பம் உலகின் ஓசைகள் குறித்து ஒலிச்சுவை இவை கலந்த ஒரு ஜீவ ரஸாமிர்தம் குயில் பாட்டு, மீண்டும் மீண்டும் படித்து லயித்துத் திளைக்கச் செய்யும். மந்திர சக்தி வாய்ந்தது இப்பாட்டு. உருவம், உள்ளடக்கம், கவிஞனின் மொழி இம்மூன்றிலும் இது உலக இலக்கியத்திற்கே ஒரு புதிய முயற்சி.
புதிய சந்தங்கள் புதிய படிமங்கள், புதிய கற்பனைகள், புதிய ஒலிச் சித்திரங்கள் இவை தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பாரதி வழங்கிய நன்கொடை, கலிங்கத்துப்பரணியைச் சற்றே நினைவூட்டி ஆனால் பரணி எட்டித் தொடாத உயரங்களில் விளையாடியது. ஊழிக்கூத்து எனும் பாரதி கவிதை. காலத்தின் மரணம் (Death of Time) பஞ்ச பூதங்கள் சிதறி ஒரு மித்தல். அண்டவெளி வெடிப்பது இவை தமிழிலக்கியத்தில் கற்பனை எட்டிப் பிடித்த புதிய குறிகள்.
சட்ட சடசட சட்டென்றுடைபடுதாளம் தாம்தரிகிட, தாம் தரிகிட, தீம்தரிகிட தித்தோம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம், தகத்தகத்தக தக வென்றாடோமோ, என்ற இந்த ஒலிப் பிரயோகங்களில் தமிழ் ஓசை ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றது. ஓர் உணர்ச்சி நிலையை ஓர் ஒலி வடிவில் வடிக்கின்ற புதிய முயற்சியையும் பாரதியே தொடங்கி வைக்கிறார். அர்த்தங்களின் உள்ளர்த்தம் போன்ற ஒரு ரஸத்திற்குச் சொல் எனும் படிக்கல் போட்டுப் பாரதி எட்டிய நுட்பம் இது.
அக்கினிக்குஞ்சு,
 மணிவெளுக்கும் சாணை, 
சேற்றிலே குழம்பல் என்ன திக்கிலே தெளிதல் என்ன...பேசும் பொற்சித்திரம், பிள்ளைக்கனியமுது, உயிர்த் தீயினிலே வளர்சோதி, ஆடி வரும் தேன் இப்படி பளிச் பளிச்சென்று மின்னும் பல படிமங்களைத் தமிழுக்கு பாரதி அறிமுகப்படுத்தினார்.[தொடரும்]

No comments:

Post a Comment